ராமநாதபுரம் : அபிராமம் செல்லும் வழியில் விக்கிரமபாண்டியபுரத்தில் குளம் தோண்டிய போது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. ராமநாதபுரம் தொல்லியல் நிறுவன தலைவர் வே.ராஜகுரு தெரிவித்ததாவது: முதுமக்கள் தாழி பெருங்கற்காலத்தை சேர்ந்தது. கி.மு.1000 முதல் கி.மு.3000 ஆண்டுகளை சேர்ந்தது. இரும்பு கண்டு பிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்துள்ளன. இக்காலத்தில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. சில முதுமக்கள் தாழியில் இரும்புப்பொருட்கள் கிடைத்துள்ளன. இக்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடல்களை காடுகளில் துாக்கி வீசுவார்கள். அதனை நரி, கழுகு போன்றவைகள் இரையாய் உட்கொண்ட பின் மிஞ்சும் எலும்புகளை சிறிய முதுமக்கள் தாழியில் சேகரித்து, அத்துடன் அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், தானியங்களையும் வைத்து யு வடி குழியில் வைத்து அடக்கம் செய்வார்கள். மலைப்பகுதியில் காணப்படும் பெருங்கற்படைச் சின்னங்களை விட சமவெளிப்பகுதியில் உள்ள முதுமக்கள் தாழி காலத்தினால் முந்தியவை ஆகும். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையானவை எனலாம். இது வரலாற்றுக்கு முந்தைய காலமாகும். இப்பகுதியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்று தகவல்கள் வெளி வரும், என அவர் தெரிவித்தார்.