இப்போது ஒரு வீட்டுமனை வாங்கிப் போட்டு, அடுத்த சில ஆண்டுகளில் விற்றால் அதிக லாபம் கிடைக்கிறது. மண் பொன்னாகிறது என்று சொல்கிறார்கள். இஸ்லாம் மண் பொன்னாவதைப் பற்றி வேறு மாதிரியாகச் சொல்கிறது. புளைலிப்னு இயால் என்பவர் கொள்ளைக்காரராக இருந்தார். ஒரு சமயம் ஒரு பெரியவர் குர்ஆன் வாசிப்பதை அவர் கேட்டார். அதிலுள்ள ஒரு வசனம் இயாலின் மனதில் புயலைஏற்படுத்தியது. அந்தக் கணத்திலேயே அவர் கொள்ளைத் தொழிலை கைவிட்டார். “யாருடைய பொருளை நாம் அநியாயமாக எடுத்தோமோ, அதை அவரிடமே கொடுத்து, மன்னிப்பும் கேட்டால் பாவம் மன்னிக்கப் படும்” என்ற ரீதியில் அந்த வசனம் இருந்தது. இயாலும், அதனடிப்படையில், யாரிடம் எல்லாம் கொள்ளை அடித்தாரோ அவர்களைத் தேடிப்பிடித்து, பொருட்களை ஒப்படைத்து மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில் பொருள் தீர்ந்தது. பொருள் கொடுக்க முடியாத வர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பு கேட்டார். அவர்களில், ஒருவரைத் தவிர அனைவரும் மன்னித்து ஏற்றனர். தன்னை மன்னிக்காத அவரிடம், இயால் எவ்வளவோ கெஞ்சினார். “என்னிடம் கொள்ளையடித்ததில் சிறிதளவாவது திருப்பிக் கொடுத்தால் தான் மன்னிப்பேன்” என்று அந்த மனிதர் கண்டிப்புடன் தெரிவித்தார். “என்னிடம் பணம் ஒன்றுமில்லையே,” என இயால் கெஞ்ச, “அப்படியானால் கைப்பிடி மண்ணை எடுத்தாவது என் பையில் போடும்,”என அந்த நபர் சொல்ல, இயாலும் அப்படியே செய்தார். அந்த நபர் சட்டைப் பையில் கையை விட்டார். அதற்குள் இருந்த மண் பொன்னாக மாறியிருந்தது. இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அந்த நபர், “உமது பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் வேதத்தில் “யாருடைய பாவ மன்னிப்பு கபூல் ஆயிற்றோ (ஏற்கப்பட்டதோ) அவர் மண்ணைஅள்ளிக் கொடுத்தாலும் அவை பொன்னாகி விடும்” என்று சொல்லப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறேன்,” என்றார்.