சப்த ரிஷிகளில் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தவிர்த்த மற்ற ஆறு பெண்களும், சரவணப்பொய்கையில் முருகனை வளர்த்து ஆளாக்கினர். இவர்களை “கார்த்திகைப் பெண்கள்” என்று குறிப்பிடுவர். இவர்கள் ஒருமுறை முருகனிடம் தங்களின் குறை தீர்க்குமாறு வேண்டினர். “முருகா! நாங்கள் தான் ஆறுமுகனான உன்னைப் பெற்றெடுத்த தாக சிலர் வதந்தியை பரப்புகின்றனர். இதனை உண்மை என்று நம்பிய ரிஷிகள் எங்களை விட்டுப் பிரிந்தனர். இந்த இகழ்ச்சியை தாங்க முடியவில்லை. இக்குறை தீர நாங்கள் ஆறுபேரும் உன்னையே சுவீகார புத்திரனாக (தத்துப்பிள்ளை) ஏற்றுக் கொள்ள விரும்புகிறோம்” என்றனர். முருகனும் அவர்களை தன் தாயாக ஏற்று அருள்புரிந்தார். முருகனே உலகின் முதல் தத்துப்பிள்ளை என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.