“ஒருவருக்கொருவர் அன்பையும், சமாதானத்தையும் பரிமாறிக் கொள்ளுங்கள்” என திருப்பலிகளில் சொல்லப்படுகிறது. இந்த அன்பின் சக்தியைத் தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதி வில்லியம் மாக்கின்ஸி யும், ஒரு தொண்டரும் டிராம் வண்டியில் பயணித்தனர். சற்றுதூரம் சென்றதும், வண்டியில் ஏறிய கர்ப்பிணி ஒருத்தி நிற்க சிரமப்பட்டாள். வில்லியத்துடன் சென்றவர், அவள் எங்கே இடம் கேட்பாளோ என பயந்து, தன் கையில் இருந்த செய்தித்தாளை முகத்துக்கு நேராக வைத்து படிப்பது போல நடித்தார். இதைக் கவனித்த வில்லி யம்ஸ், அந்தப் பெண்ணை தன் இடத்தில் அமரச்சொல்லி விட்டு நின்றார். சில ஆண்டுகள் கழிந்தன. வில்லியம் மாக்கின்ஸி அமெரிக்காவின் 25வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். ஒருநாள், அவருடன் சென்ற தொண்டர் தன் முன்னாள் சகாவைச் சந்திக்க வந்தார். “அதிபரே! நானும் அரசியல்வாதி தானே! அமெரிக்க காங்கிரசுக்காக பல பணிகளைச் செய்துள்ளேன். என்னை ஒரு மாகாணத்தின் அதிபராக ஆக்குங்களேன்!” என்றார். மாக்கின்ஸி அவரிடம் “பார்க்கலாம்” என சொல்லி அனுப்பினார். ஆனால் வேறொருவரை மாகாணத்தின் அதிபராக நியமித்தார். காரணம் என்ன தெரியுமா?
“ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிறிது தூரம் செல்ல இடம் கொடுக்காத இவரிடம், ஆட்சி சிக்கினால் மக்கள் என்னாவார்கள்?” என்ற சிந்தனை அதிபரின் மனதில் எழவே, அவரை பதவியில் நியமிக்கவில்லை. பார்த்தீர்களா! அன்பு எவ்வளவு உயர்ந்ததென்பதை! “ஒருவருக்கொருவர் அன்புடனும், சமாதானத்துடனும் வாழுங்கள்” என்ற போதனையை பின்பற்றினால், நாடாளும் பதவி கூட உங்களைத் தேடி வரும்.