பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
01:06
பகவான் கிருஷ்ணர், ‘யக்ஞானாம் ஜப யக்ஞோசுஸ்மி’ - யக்ஞங்களில் நான் ஜப யக்ஞமாக இருக்கிறேன் என்று, பகவத்கீதையில் (10, 25) கூறியிருக்கிறார். ஆன்மிக சாதனைகள், தவங்கள், யாக யக்ஞங்கள் என்று எண்ணற்றவை இருக்கின்றன. அவற்றுள் எளிமையானதாகவும், அனைவரும் பின்பற்றக்கூடியதாகவும் இருப்பது ராமஜபம் மட்டும்தான். கலியுகத்தில் இறைவன் திரு நாமத்தை ஜபம் செய்வது முக்திக்கு உரிய மிகவும் சிறந்ததோர் வழியாகும். கிருதயுகத்தில் முக்தி பெறுவதற்குரிய வழியாகக் கடுமையான தவமும் தியானமும் இருந்தன. திரதோயுகத்தில் முக்தி பெறுவதற்கு உரிய வழியாக யாகம், யக்ஞம் போன்றவை இருந்தன. துவாபரயுகத்தில் முக்தி பெறுவதற்கு உரிய வழியாகப் பெரிய பூஜைகள் விரிவான பூஜைகள் ஆகியவை இருந்தன. ‘இந்த மூன்றாலும் என்ன பயன் கிடைக்குமோ, அந்தப் பயனைக் கலியுகத்தில் இறைவன் நாம சங்கீர்த்தனம் - இறைவன் நாமஜபம் தரும் ’ என்று பெரியோர் கூறியிருக்கின்றனர். ‘மனனாத் த்ராயதே இதி மந்த்ர: ’ என்றும், மந்திரம் பற்றி கூறியிருக்கிறார்கள். இதற்கு, ‘நினைப்பவரை பிறப்பு இறப்பிலிருந்து காப்பாற்றுவது எதுவோ, அதற்கு மந்திரம் என்று பெயர்’ என்று பொருள் கூறியிருக்கிறார்கள். கிருஷ்ண துலாபாரம் நடந்தது. அப்போது சத்தியபாமா, கிருஷ்ணனின் எடைக்குச் சமமாக தராசு தட்டில் பொன்னையும், வைர வைடூரிய ஆபரணங்களையும் வைக்க முயன்று தோல்வியடைந்தாள். ஆனால் ருக்மிணியோ கிருஷ்ணனின் நாமத்தை ஒரு துளசிதளத்தில் எழுதித் தராசின் மற்ற தட்டில் வைத்தாள். என்ன ஆச்சரியம்! அது கிருஷ்ணனின் எடைக்குச் சமமாக நின்றது. இந்த நிகழ்ச்சி இறைவனுக்கு சமமானது; இறைவனின் நாமம் என்பதை உணர்த்துகிறது.
இறைவனின் திருநாமம் கேட்டதையெல்லாம் தரும் கற்பகமரம்; கேட்டதையெல்லாம் தரும் சிந்தாமணி, கேட்டதையெல்லாம் தரும் காமதேனு போன்றது என்று நாம் முழுமையாக நம்ப வேண்டும். உலகில் உயர்வற உயர்ந்த ஒரு பொருள் உண்டு என்றால் அது இறைவன் திருநாமத்தை ஜபம் செய்வதுதான்; அதுவே உலகில் பயனுடைய செயலும் ஆகும். முக்தி பெறுவதற்கு ஜபம், ஜபம், ஜபம் ஒன்றே கலியுகத்தில் நாம் பின்பற்றுவதற்கு உரிய ஒரே வழி. யக்ஞம், தானம், தவம் போன்றவை மனிதனுக்குப் புனிதம் அளிக்கின்றன. இவ்விதம் மனிதனுக்குப் புனிதம் அளிப்பவற்றிலும் புனிதமானது ஜபம் என்பதை நம் முன்னோர், ‘பவித்ரானாம் பவித்ரம் ஜபம் ’ என்றனர். இறைவனின் நாமத்திற்கு மனிதனின் பாவங்களைப் போக்கும் சக்தியும் இறைவனை அடைவதற்கு இடையூறாக உள்ள வினைகளை நீக்கும் சக்தியும், மனிதனைப் புனிதானக்கும் சக்தியும் உண்டு. ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்கிறார், நம்மாழ்வார், ‘உலகப்பற்று நீங்கினால்தான் முக்தி கிடைக்கும்’ என்பது இதன் பொருள். இவ்விதம் முக்திக்குத் தடையாக இருக்கும். உலகப்பற்றுகளை, ஜபம் செய்வதன் மூலம் நாம் நிச்சயமாக நீக்கிக்கொள்ள முடியும். இறைவன் நாமம் சொல்லி ஒரு செயல் புரிந்தால், அந்தச் செயல் இறைவனுக்கு அர்ப்பணம் ஆகிவிடுகிறது. யோக சூத்திரத்தில் பதஞ்சலி மகரிஷி, ‘ஜபம் என்பது பகவானைக் கருத்தில் கொள்வது; அவரது ரூபம் குணநலன்களை மனதால் காண்பது’ என்கிறார்.
‘நாமமும் நாமியும் ஒன்றே ’ என்கிறார், பகவான் ராமகிருஷ்ணர்.
இறைவனும் இறைவனின் நாமமும் ஒன்றுதான். இறைவன் வேறு, இறைவன் நாமம் வேறு அல்ல. இறைவன்தான் இறைவனின் நாமம். இறைவனின் நாமம்தான் இறைவன். இறைவனே இறைவனின் நாமமாக இருக்கிறான். இறைவனின் நாமமே இறைவனாக இருக்கிறது. இறைவனுக்கு இணையானது இறைவன் நாமம் இறைவனின் நாமத்திற்கு இணையானவன் இறைவன். அன்னை சாரதாதேவி, ‘ஜபாத் சித்தி’, ‘ஜபத்தினால் சித்தி அடையலாம் ’ என்கிறார். ஜபம் பெரும் பயன் அளிக்கக்கூடியதும், மோட்சத்தையே தரக்கூடியதும் ஆகிய ஓர் அற்புத ஆன்ம சாதனை. மகான்கள் பலர் இறைநாமத்தை ஜபம் செய்ததன் மூலம் இறைவனை அடைந்துள்ளனர். ‘நாமும் அந்த நிலையை நிச்சயம் அடைவோம் ’ என்ற நம்பிக்கையுடன் இறையருளைப் பிரார்த்தித்து ஜபம் செய்தால், உயர் ஆன்மிக நிலையை உறுதியாக அடைய முடியும். துன்பமயமான உலகில் மகிழ்ச்சியுடன் இருப்பவன் ராமஜபம் செய்பவன் மட்டுமே. ஆன்மிக வாழ்க்கையில் நாம் எதைப் பெற விரும்பி ஜபம் செய்கிறோமோ, அதைவிடவும் பல மடங்கு அதிகமான நன்மைகளைத் தருவது நாமஜபம். இறைவன் தன் நாமத்தை ஜபம் செய்பவர்களின் நலன்களைக் கவனித்துக் கொள்வது மட்டுமின்றி, முடிவில் அவர்களுக்கு முக்தியும் அளிக்கிறான். அதிகமாக மந்திர ஜபம் செய்பவன் உடலில் அந்த தெய்வமே மந்திரசக்தி வடிவில் குடிகொண்டிருக்கிறது.