காஞ்சிப்பெரியவரை தரிசிக்க ஐந்து வயது பெண் குழந்தையுடன் வந்தனர் ஒரு பெற்றோர். “சுவாமி! குழந்தையை நாளை பள்ளியில் சேர்க்கப் போறோம். தங்களிடம் ஆசி பெற வந்தோம்” என்றனர். அப்போது சம்ஸ்கிருத பண்டிதர்கள் சிலர் பெரியவரை தரிசிக்க நின்றனர். அவர்களின் கவனமும் செல்லச் சிட்டாக நின்ற குழந்தையின் பக்கம் திரும்பியது. பெரியவர் கனிவுடன் “நாளையிலருந்து நீ பள்ளிக்கூடம் போறியா... உனக்கு முதல் பாடம் கத்து தரட்டுமா?” என்றார்.
“சொல்லித் தாங்கோ... கத்துக்கறேன்!” என்றது சமர்த்துக் குழந்தை. பெற்றோரும், பண்டிதர்களும் சுவாமி என்ன சொல்லப் போகிறார் என ஆவல் கொண்டனர். “விக்னம் (தடைகளை) தீர விநாயகரைத் தான் முதலில் கும்பிடணும். உனக்கு பிள்ளையார் பாடல் சொல்லித் தரவா?”குழந்தையும் தலையசைத்தது. ’மூஷிக வாகன மோதக ஹஸ்த’ என்று தொடங்கும் பிள்ளையார் ஸ்லோகத்தையே சொல்வார் என பண்டிதர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வைப் பாட்டியின் ’வாக்குண்டாம்’ எனத் தொடங்கும் பிள்ளையார் துதியைச் சொல்லத் தொடங்கினார் பெரியவர். ’வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு’
அதை அழகாகத் திருப்பிச் சொல்லியது குழந்தை. “எல்லாக் குழந்தைகளுக்கும் இதையே முதல் பாடமாகச் சொல்லித் தர வேண்டும். விநாயகரை வணங்கிய பிறகு அவ்வையாரின் ஆத்திசூடியை கற்றுத்தர வேண்டும். ’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பதை பிஞ்சு மனங்களில் நாம் பதிய வைக்க வேண்டும். அவ்வையாரை விட நாட்டுக்கு உபகாரம் செய்தவர் யாருமில்லை. ஆயிரம் காலமாக இந்த தேசத்தில் ஒழுக்கம், பக்தி இருக்கிறது என்றால் அது அவ்வையாரால் தான். தலைமுறை தலை முறையாக நாம் படிக்க ஆரம்பிக்கிற போதே ஆத்திசூடி பாடல் தான் முதலில் வருகிறது. தமிழகம் செய்த தவப்பயன் அவ்வையார்” என்றார் மகாபெரியவர். இக்கருத்தை மனப்பூர்வமாக அனைவரும் ஏற்று மகிழ்ந்தனர். திருப்பூர் கிருஷ்ணன்