நாகர்கோவில்: அக்.,10-ம் தேதி தொடங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சரஸ்வதிதேவி மற்றும் சுவாமி சிலைகள் யானை மீது ஊர்வலமாக கோண்டுசெல்லப்பட்டன. இதில் மத்திய,கேரள அமைச்சர்கள் பங்கேற்றனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மனாபபுரம் விளங்கியது. இங்குள்ள அரண்மனை வளாகத்தில் தேவாரகெட்டு சரஸ்வதி கோயில் உள்ளது. இங்கு கவிச்சக்கரவர்த்தி கம்பர் வழிபட்ட சரஸ்வதிதேவி சிலை உள்ளது. மன்னர்கள் காலத்தில் இக்கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் காலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.
அதன் பின்னரும் நவராத்திரி விழா தடையின்றி நடப்பதற்காக மன்னர் உத்தரவுப்படி சரஸ்வதிதேவி சிலை யானை மீது பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டது. மன்னர் ஆட்சி முடிந்த பின்னரும், அந்த மரபு தொடர்கிறது. இந்த விழா இருமாநிலங்களை இணைக்கும் விழாவாக நடக்கிறது.வரும் 10 -ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்குவதை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு பத்னாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்பட்டது. யானை மீது சரஸ்வதி, பல்லக்குகளில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சிலைகள் எடுத்து செல்லப்பட்டன. யானை மீது சரஸ்வதி அம்மன் சிலை ஏற்றப்பட்ட போது கேரள போலீசார் பேன்ட் வாத்யம் முழங்க, துப்பாக்கியை வானை நோக்கி பிடித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக காலை 7:00 மணிக்கு மன்னரின் உடைவாள் எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடந்தது.
கேரள தொல்பொருள் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வாளை குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையர் அன்புமணியிடம் கொடுத்தனர். வாள் ஊர்வலத்தின் முன்னால் எடுத்து செல்லப்பட்டது.நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கலெக்டர் பிரசாந்த வடநேரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று மாவட்ட எல்லையான களியக்காவிளை வந்ததும், கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். இன்று நெய்யாற்றின்கரையில் தங்கும் பவனி, நாளை திருவனந்தபுரம் செல்லும் போது, அங்கு திருவிதாங்கூர் அரண்மனை சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். வரும் 10-ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்கும்.ஊர்வலம் தொடங்கும் போது சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கை வாசகங்கள் அடங்கிய ஐயப்ப பக்தர்கள் அட்டைகளை துாக்கிப்பிடித்தனர். அவர்களிடம் எஸ்.பி. ஸ்ரீநாத் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தார்.