பதிவு செய்த நாள்
14
அக்
2018
01:10
திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், நவராத்திரி உற்சவம், கோலாகலமாக நடைபெறுகிறது.திருவள்ளூர், தேரடி அருகே, பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவராத்திரி உற்சவம் துவங்கி, கோலாகலமாக நடக்கிறது.நவராத்திரி முதல் நாளில், சுக்கிரவார அம்மன் எனும் திரிபுரசுந்தரி உற்சவ மூர்த்தி, கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.தினமும், காலையில் மஹா அபிஷேகம், மாலையில் அலங்காரம், தீபாராதனை, ஊஞ்சல் சேவை மற்றும் கோவில் உள்புறப்பாடு நடக்கிறது.மீனாட்சி, காமாட்சி, மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, துர்க்கை, அன்னபூரணி, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி என, தினம் ஓர் அலங்காரத்தில், திரிபுரசுந்தரி அம்மன் எழுந்தருள்கிறார்.பத்தாம் நாள் விஜயதசமி அன்று சந்திரசேகர் சுவாமி, வீதியுலா சென்று, ஆட்சியர் அலுவலகம் அருகே, தீர்த்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், பாரிவேட்டை உற்சவத்தில் பங்கேற்கிறார்.விழா ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் ரா.ரவி குருக்கள் செய்கிறார்.