நபிகள் நாயகத்தை விரும்பாத சிலர் அவர் மீது அவதூறு பரப்பினர். அதன் விளைவாக மக்கள் அவரை வெறுத்தனர். அவரோ அதை பொருட்படுத்தாமல் தன் பணியில் மட்டும் கவனம் செலுத்தினார். ஒருநாள் நாயகம் தெருவில் செல்லும் போது அழுகிய முட்டை, காய்கறிகள் தலை மீது விழுந்தன. நிமிர்ந்து பார்த்த போது, மாடிவீட்டு கிழவி ஒருத்தி கூடையுடன் நிற்கக் கண்டார். புன்னகைத்தபடி இடத்தை விட்டு நகர்ந்தார். மறுநாளும் இது தொடர்ந்தது. அப்போதும் அமைதி காத்தார் நாயகம். நாட்கள் நகர்ந்ததே ஒழிய கிழவியின் செய்கையில் மாற்றமில்லை. அன்றும் கிழவி எதையோ தலையில் கொட்டுவாள் என்ற எதிர்பார்ப்புடன் வந்தார் நாயகம். கிழவியின் வீட்டைக் கடந்த போது ஏதும் நடக்கவில்லை. நிமிர்ந்து பார்த்தார். கிழவி தென்படல்லை. உடனே மாடியேறி கிழவியின் வீட்டுக் கதவை தட்டினார். கதவு தானாக திறந்தது.
“அம்மா...” என அழைத்தபடி உள்ளே சென்றார். இருட்டில் முனகல் சத்தம் கேட்டது. விளக்கை எடுத்துக் கொண்டு சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார். அங்கு கட்டிலில் படுத்திருந்தாள் கிழவி. உடல் காய்ச்சலால் கொதித்தது. மருத்துவரை அழைத்து வந்து வைத்தியம் செய்தார். வெந்நீருடன் மருந்து புகட்டியதோடு, வேளா வேளைக்கு சாப்பாடும் கொடுத்தார். நாயகத்தின் கைகளைப் பற்றியபடி கண்ணீர் விட்ட கிழவி, “ஐயா... என்னை மன்னியுங்கள். உமக்கு நான் செய்த கொடுமைக்கு மன்னிப்பே கிடையாது” என்றாள். “அம்மா. அன்புக்கு மிஞ்சிய மருந்து கிடையாது. செய்தது தவறு என்பதை நீங்கள் உணர்ந்த போதே பாவம் மறைந்து விட்டது. நீங்கள் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.