பம்பா: தொடர் போராட்டங்கள் காரணமாக சபரிமலை கோயிலைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு அறிவித்தது.
பதட்டம்: இதற்கிடையில், நவ.,17 ல் சபரிமலை செல்ல உள்ளதாக அறிவித்திருந்த திருப்தி தேசாயும் இன்று கொச்சி வந்துள்ளதால் கேரளாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், கேரள அரசின் முடிவை எதிர்த்தும் தற்போது பல்வேறு கட்சிகளும், இந்து அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. திருப்தி தேசாய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சி விமான நிலையம் முன் அதிகாலை முதலே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல், திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளதால் சபரிமலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.