மேலுார்: மேலுார் நரசிங்கம்பட்டியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் வினோத திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நரசிங்கம்பட்டி பெருமாள் மலையடிவார கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்பிடித்திருவிழா கொண்டாடுவர். மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடியின்றி வாழவும் வேண்டி நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் முன்புள்ள ஓடையில் புனித நீராடினர்.
பின் அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன் போட்டு வழிபட்டனர். இவ்வாறு ஆண்டுதோறும் பக்தர்கள் போட்ட மணல் இன்று மலை போல் குவிந்துள்ளது. இம்மண் மலையை மூன்று முறை சுற்றி வந்த பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி வந்து முடிகாணிக்கை செலுத்தினர். இதே போல் மேலவளவு கருப்பு கோயிலுக்கு வந்த பக்தர்கள் மலை மீது ஏறி கற்களை வீசியும், விளக்கு ஏற்றியும் வழிபட்டனர்.