பதிவு செய்த நாள்
19
ஜன
2019
12:01
உத்தரகோசமங்கை: கோயில்களுக்கு சென்றவுடன் நம்மையும் அறியாமல் ஆன்மிக சிந்தனையில் மனதை ஈர்க்கும் தன்மைக்கு காரணமாக விளங்குவது மூலவர் சிலைகளாகும்.
அழகிய புன்னகை ததும்பும் சிலைகளை செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. கல்லிலே கலைவண்ணம் காண்பது கடினமான வேலைதான். வெண்கல மணியோசை தரும் கல்லில் செய்யப்படும் சுவாமி சிலைகளே முதல் தரம் வாய்ந்த சிலைகள்.
மனிதருக்கு எப்படி சாமுத்திரிகா லட்சணம் பொருந்துகிறதோ, அதே போல் கல்லில் வடிக்கப்படும் சிற்பத்திற்கும் பொருந்துகிறது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் அருகே சக்தி சிற்பக்கலைக் கூடம் என்ற பெயரில் பாரம்பரியமாக சிற்ப கலைக் கூடம் நடத்தி வருகிறார் சிற்பி உத்தண்டராமன் 52. இனி அவர் கூறுவதை கேட்போம்.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக எனது பாட்டனார், தந்தையிடம் சிற்பக்கலையை கற்று 45 ஆண்டுகளாக சிலைகள் செய்து வருகிறேன்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குழியில் 70 முதல் 100 அடி ஆழத்தில் கருங்கல் பாறைகள் கிடைக்கிறது.
இந்த கருங்கல் சிலைகள் வடிவமைக்க ஏற்றது. சிலைகளின் தேவைக்கேற்ப சதுரமாக வெட்டி லாரிகளில் கொண்டு வந்து, சிற்பக்கூடத்தில் சிலை செதுக்கி வழங்குகிறோம். ஒன்று முதல் 12 அடி உயரம் வரையிலான அனைத்து தெய்வங்களின் உருவங்களும் செதுக்கப்படுகிறது.
முன்பு சுத்தியல், உளியால் செதுக்கிய காலம் மலையேறி போய் 50 சதவீதம் நவீன தொழில் நுட்ப கருவிகளின் உதவியால் செதுக்கி வருகிறோம்.
குறைந்தது 15 முதல் 30 நாட்களுக்குள் சிலைகள் தயாராகி விடும். விநாயகர், பெருமாள், சிவன், முருகன், அம்மன், பஞ்சபாண்டவர்கள், பாமா ருக்மணி, கிருஷ்ணன், ஆகியவை நவதாளம், பஞ்ச தாளத்தில் வடிக்கப்படுகிறது. (தாளம் என்பது கையால் அளக்கப்படும் வகை) தேசிய தலைவர்களின் உருவங்கள் அனைத்தையும் செய்கிறேன். எனக்கு உறுதுணையாக மகன் சீனிவாசன் உள்ளார். வடிக்கக்கூடிய சிலைகளை முதலில் ஓவியமாக தீட்டிய பிறகே முப்பரிமாணத்தில் சிலை செதுக்கப்படுகிறது.
பார்க்கும் சிலையில் நேர்த்தியாக தெய்வ கடாட்சம் பொருந்தியதாக இருந்தால், வணங்கப் படுவது சிலைகள் மட்டுமல்ல செய்யும் தொழிலும் தான், என்றார்.தொடர்புக்கு: 63835 84185.