பதிவு செய்த நாள்
24
ஜன
2019
12:01
திருப்பூர்: தமிழகம் முழுவதும், நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் நிகழ்ச்சி, தை மாதம் நடக்கிறது.தை மாதம் சூரியனுக்கு மட்டுமல்ல, சந்திரனுக்கும் விழா எடுப்பது, தமிழர்களின் பாரம்பரியம். நிலாவை குழந்தையாக பாவித்து, தினமும் அமுது ஊட்டியும், கும்மி விளையாட்டு காட்டியும் வழிபாடு நடத்துகின்றனர்.
தைப்பூச கொடியேற்ற நாளில் துவங்கி, 12 நாட்களுக்கு, பெண்கள் விழாவை கொண்டாடுகின்றனர். அனுப்பர்பாளையம் கே.பி.எஸ்., நகர் பகுதியில், பெண்கள் இணைந்து, நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் நிகழ்ச்சியை நடத்தினர்.அப்பகுதியை சேர்ந்த சுமதி கூறியதாவது:நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் கலாச்சார நிகழ்ச்சியை, அனைத்து ஊர்களிலும் கொண்டாட வேண்டும். அன்றாட பணிப்பளுவை மறந்து, பெண்களும், குழந்தைகளும், இரவு நேரத்தில் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.முதல் நாளில், நிலா பிள்ளைக்கு, சர்க்கரை, பழம் படைத்து கும்மியடிப்போம். அதற்கு பிறகு, தினமும் ஒரு சாதம் படைத்தோம். குழந்தை, பலகாரம் சாப்பிட்டதால், வயிற்றுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று, தேரோட்டத்துக்கு மறுநாள் எதுவும் படைப்பதில்லை. மறுநாள், பூண்டு ரசம் மட்டும் படைக்கிறோம். நாளை (இன்று) தயிர்சாதம் படைத்து, விழாவை நிறைவு செய்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.