இசைவிமர்சகர் ஒருவர் தன் நுட்பமான விமர்சனங்களால் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தார். அவர் எழுதிய இசைவிமர்சனப் புத்தகத்தின் முதல்பிரதியை காஞ்சி மகாசுவாமிகளிடம் கொடுத்து ஆசி பெற வந்தார். அவரிடம் பேசிய சுவாமிகள், தன்னை சந்திக்க பக்தர்கள் காத்திருப்பதால், ”நீ உடனே காமாட்சியம்மனை தரிசித்து வா. பிறகு சாவகாசமாக பேசலாம். அங்கே தர்பார் நடக்கிறது.
முடிவதற்குள் போ” என்றார். அப்போது நவராத்திரி விழா என்பதால் காமாட்சியம்மன் கோயிலில் விமரிசையாக விழா நடந்து கொண்டிருந்தது. காமாட்சியம்மனுக்கு செய்யும் விசேஷ அலங்காரத்தில் தர்பாரும் ஒன்று. மகாராணியாக கிரீடம் சூடியபடி ராஜசபையில் கொலுவிருப்பது போல் செய்யப்படும் அலங்காரம் இது. இசைவிமர்சகர் வேகமாக கோயிலுக்கு சென்றார். அங்கு வழக்கமான அலங்காரத்தில் அம்மனை தரிசித்தார். ’அம்மன் தர்பாரில் இல்லையே? பின்னர் ஏன் தர்பார் முடிவதற்குள் போகச் சொன்னார் சுவாமிகள்?” என யோசித்தார் விமர்சகர் அப்போது மகாசுவாமிகளின் பக்தையான இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரல் காற்றில் தவழ்ந்து காதில் தேனாக தித்தித்தது. அன்று நவராத்திரி விழாவில் எம்.எஸ். ஸின் கச்சேரி. அவர் பாடியது தியாகராஜ சுவாமிகள் எழுதிய சூயோசனா கமல லோசனாசூ என்ற தர்பார் ராகத்தில் அமைந்த பாடல். ”ஆஹா...! அலங்காரம் என்று நினைத்தோமே! தர்பார் ராகத்தை அல்லவா சுவாமிகள் சொல்லியிருக்கிறார்! பாடல் முடிவதற்குள், தான் அதைக் கேட்க வேண்டும் என்பதையே ’தர்பார் முடிவதற்குள் போ’ என்று துரிதப்படுத்தினார் போலும்! சுவாமிகள் சொன்னதன் அர்த்தம் இப்போதல்லவா புரிகிறது! என மகிழ்ந்தார்.