பதிவு செய்த நாள்
13
மார்
2019
04:03
நல்லதை மட்டுமே சிந்திக்கும் மேஷ ராசி அன்பர்களே!
சூரியனும், ஏப்.9ல் புதனும் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் சுக்கிரன் மார்ச் 22ல் இருந்து சாதகமான இடமான ரிஷபத்திற்கு வருகிறார். குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலன் அளிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
குருவால் மனதில் உற்சாகம் பிறக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஏப். 1,2ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மார்ச்17,18, ஏப்.12ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். மார்ச் 15,16, ஏப்.6,7,8ல் சகோதர வழியில் உதவி கிடைக்கும். ஏப்.11,12ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். செவ்வாயால் மார்ச் 20க்கு பிறகு எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு வரும் பிரச்னைகளை புதன் நிவர்த்தி செய்வார். ஏப்.9 க்கு பிறகு பணிச்சுமையை சுமக்க வேண்டியிருக்கும். அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். சிலர் பணியின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம். அதே நேரம் பிரச்னையை முறியடிக்கும் வல்லமை குருவால் கிடைக்கும். மார்ச்30,31ல் எதிலும் வெற்றி காணலாம். மார்ச்20க்கு பிறகு நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு நிதானம் தேவை.
வியாபாரத்தில் குரு, ராகுவால் பகைவர்சதியை முறியடிக்கும் வலிமை பெறுவீர்கள். உங்களின் ஆற்றல் மேம்படும். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். செவ்வாயால் மார்ச் 20க்கு பிறகு பகைவர் தொல்லை வரலாம். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. சிலர் அரசு வகையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச் 21,22ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஏப்ரல் 3,4,5,9,10ல் சந்திரனால் சிறுதடைகள் வரலாம்.
கலைஞர்களுக்கு எதிரிகள் தொல்லை, முயற்சியில் இருந்த தடை முதலியன மார்ச் 22க்கு பிறகு மறையும். அதன் பின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் புதன் சாதகமாக காணப்படுவதால் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. நெல், மஞ்சள், கிழங்கு வகைகள், நிலக்கடலை, கரும்பு, எள், கேழ்வரகு, பழங்கள், காய்கறிகள் மூலம் அதிக வருமானத்தைக் காணலாம்.
பெண்களுக்கு குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். குருவால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். உறவினர் மத்தியில் செல்வாக்கு மேம்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஏப்.11,12ல் பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப்பெறலாம். பயணத்தின் போது கவனம் தேவை. ஏப்.9க்கு பிறகு உடல் நலனில் அக்கறை தேவை.
* நல்ல நாள்: மார்ச் 15, 16, 21, 22, 23, 24, 30, 31, ஏப்.1, 2, 6, 7, 8, 11, 12
* கவன நாள்: மார்ச் 25, 26, 27 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண் 2, 3
* நிறம்: மஞ்சள், நீலம்
பரிகாரம்:
* ராகுகாலத்தில் துர்க்கைக்கு அர்ச்சனை
* சனியன்று சனீஸ்வரருக்கு எள் விளக்கு
* செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம்