பதிவு செய்த நாள்
04
மே
2019
12:05
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில்,மிகவும் பழமையான சுப்ரமணிய சுவாமி கோவில் திருப்பணி பாதியிலேயே நிற்கிறது.மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றின் கரையோரம் மிகவும் பழமையான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இது, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, வனபத்ரகாளியம்மன் கோவிலின் உப கோவில். கடந்த, 1984, ஜன., மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இங்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தைப்பூசம், வைகாசி விசாகம் தேரோட்டம், சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றன.இவ்விழாக்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். ஆண்டுகள் நகர்ந்து செல்ல செல்ல, இக்கோவிலை சரியாக பராமரிக்காததால், கருவறை, மகா மண்டபம், அர்த்த மண்டபம் சிதிலமடைந்தது.பல நெருக்கடிகளை கடந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், திருப்பணி துவக்கப்பட்டது. துவக்கத்தில் பணிகள் துரிதமாக நடந்தன. கருவறை, கோபுரங்கள், மகா மண்டபம், அம்மன், சிவன், நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் கட்டி, கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டன. கோவிலுக்கான சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் கற்கள் பதிக்கும் பணியும், சோபன மண்டபம் கட்டும் பணியும் நடைபெறாமல் உள்ளன. ஓராண்டாக திருப்பணி ஏதும் நடைபெறாததால், பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமு கூறுகையில்,கோவில் நிதி மற்றும் உபயதாரர் மூலமாக திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது. தரைத்தளத்தில் கற்கள் பதிப்பது, சோபன மண்டபம் கட்டும் பணி விரைவில் துவக்கப்படும், என்றார்.