சொர்க்கவாசல் வழியாக நெல்மூடைகள்:ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் மீண்டும் சர்ச்சை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2019 01:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சொர்க்கவாசல் வழியாக நெல்மூடைகள் கொண்டு செல்லப்பட்டதால், ஆகம விதிகள் மீறபட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இங்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் சில விழா நாட்களில் சொர்க்கவாசல் திறப்பு நடக்கும். மற்ற நாட்களில் திறக்கப்படாது. இந்நிலையில் கோயிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நெல் மூடைகள் ஒழுங்குமுறை கிட்டங்கிக்கு சொர்க்கவாசல் கதவை திறந்து வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டது.
ஆகமவிதிகள் மீறப்பட்டுள்ளது பக்தர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர் பான வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
கோயில் செயல் அலுவலர் இளங்கோவனிடம் கேட்டபோது, ""பல ஆண்டுகளாக இந்த வழியாகத் தான் நெல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தற்போது ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு இடத்தில் நெல் கிட்டங்கி உருவாக்கப் படும். என்றார்.கோயிலுக்கு நேற்று (மே., 3ல்) கோயில் பாதுகாப்பு கூடுதல் எஸ்.பி., வீரப்பெருமாள் வந்தார். பாதுகாப்பு குறித்து பார்வையிட்டார். பின்னர் போலீஸ், கியூ பிராஞ்ச், சி.ஐ.டி., போலீசார், அறநிலையத்துறை, நகராட்சி, தீயணைப்புத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.