பதிவு செய்த நாள்
10
மே
2019
04:05
திருச்செந்தூர் முருகன் கோவில், மயில் சிலை தொடர்பான வழக்கை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றாமல்,தூத்துக்குடி எஸ்.பி., காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான, சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. நடவடிக்கைஇக்கோவிலின், மூலவர்
சிலைக்கு எதிரே, மகா மண்டபம் உள்ளது. அதில், 2,000 ஆண்டுகள் பழமையான, கற்களால் செய்யப்பட்ட, நந்தி மற்றும் இரண்டு மயில் சிலைகள் உள்ளன.இவற்றில், ஒரு மயில்
சிலையின் தலை துண்டிக்கப்பட்டு உள்ளது, பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது தொடர்பாக, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, நரசிம்ம ரங்கராஜன் என்பவர், ஹிந்து அறநிலையத் துறை கமிஷனரிடம், இ மெயில் வாயிலாக புகார் அளித்தார்.
இதையடுத்து, திருமேனி காவல் பணியாளர்கள் நான்கு பேர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மயில் சிலையை அபகரிக்க முயற்சி நடந்துள்ளதாக, சிலை
கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்கவேலுக்கு தெரியவந்தது.
அவரது தலைமையில், முதல்கட்ட விசாரணை நடந்தது. அப்போது, 2017ல், திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில், பொறுப்பு அதிகாரியாக இருந்த, ஹிந்து அறநிலையத் துறை
இணை கமிஷனர், பரஞ்ஜோதிக்கு, இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பரஞ்ஜோதி மற்றும் திருமேனி காவல் பணியாளர்கள், சாமிநாதன், சுரேஷ், ராஜகுமார் ஆகியோர் மீது, திருச்செந்தூர் போலீசார், வழக்கு பதிந்துள்ளனர்.
உறுதிஇந்த வழக்கை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்ற, உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால், தூத்துக்குடி எஸ்.பி., இன்னும் வழக்கை மாற்றாமல், காலம் தாழ்த்தி வருவதாக
குற்றச்சாட்டு எழுந்தள்ளது.இதுகுறித்து, உயர் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் நடக்கும், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரிப்பர். பழங்கால சிலைகள் திருட்டு தொடர்பாக,
புதிதாக பதிவு செய்யப்படும் வழக்குகளை அவரிடம் ஒப்படைக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை, உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.திருச்செந்தூர் மயில் சிலை தொடர்பான வழக்கை, தூத்துக்குடி மாவட்ட, எஸ்.பி., உடனடியாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காமல்
காலம் தாழ்த்தியதால், புலன் விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி., காலம் தாழ்த்துவது, சட்டத்திற்கு புறம்பானது; நீதிமன்றத்திற்கு அவர், பதில் சொல்ல
நேரிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.