பதிவு செய்த நாள்
12
மார்
2012
10:03
திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள, விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை மதிப்பீடு செய்த பின், அவற்றை அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட புதிய அறையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய அறை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய, வாஸ்து நிபுணர் ஆய்வு மேற்கொண்டார்.கேரளா, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில், பூமிக்கடியில் ஆறு பாதாள அறைகள் உள்ளன. அவற்றில் விலைமதிக்க முடியாத தங்க, வைர, ரத்தின பொருட்கள், பல நூற்றாண்டுகளாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ய, வேலாயுதன் நாயர் தலைமையில் நிபுணர் குழுவை, சுப்ரீம் கோர்ட் நியமித்தது. அந்த குழு, கடந்த மாதம் 20ம் தேதி முதல், பொக்கிஷங்களை மதிப்பீடு செய்து வருகிறது.இந்நிலையில், விலைமதிக்க முடியாத அரிய வகை பொருட்களை அதிநவீன பாதுகாப்பு கருவிகள் கொண்ட, சேதமடையாத அறையில் வைத்து பாதுகாக்க, சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. அதற்கான இடத்தை நிபுணர் குழுவினர், சில தினங்களாக ஆய்வு செய்தனர். அவற்றில், தற்போது அங்குள்ள, "ஏ அறைக்கு எதிரே சந்தனம் அரைக்கும் பகுதியை தேர்வு செய்திருந்தனர். இருப்பினும், வாஸ்து சாஸ்திரப்படி அந்த இடம் புதிய அறை அமைக்க தோதாக இருக்குமா என்பது குறித்து அறிய, வாஸ்து நிபுணர்களின் உதவியை கோர, நிபுணர் குழுவினர் முடிவு செய்தனர். இதை அடுத்து, பத்மநாபசுவாமி கோவிலின், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நீண்ட காலமாக வாஸ்து பார்த்து ஆய்வு செய்து வரும், காணிப்பைய்யர் கிருஷ்ணன் நம்பூதிரிபாடு மற்றும் அவரது வல்லுனர் குழுவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து, அக்குழுவினர் கோவிலில் பாதாள அறை பகுதியில், சில இடங்களை ஆய்வு செய்தனர்.மேலும், கோவில் வளாகத்தில் உள்ள பல பகுதிகளிலும், அவர்கள் வாஸ்துவுக்காக ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் எந்த இடத்தை தேர்வு செய்துள்ளனர் என்பது குறித்து, விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.வாஸ்து முறைப்படி தேர்வு செய்யப்படும் இடத்தை, நிபுணர் குழுவும் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில், அறை அமைப்பதற்கான பிற செலவுகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு, அனுமதிக்காக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அறிக்கையை சுப்ரீம் கோர்ட் பரிசீலித்த பிறகே, புதிய அறை அமைப்பது குறித்தான நடவடிக்கைகள் துவங்கும்.