செல்வந்தரான முகமது இக்பாலுக்கு சொந்தமாக பல கப்பல்கள் இருந்தன. பணம் தேடுவது மட்டுமே வாழ்வின் குறிக்கோள் என வாழ்ந்து வந்தார். ஒருநாள் தெருவில் போன பிச்சைக்காரனிடம், ” வீட்டில் பிரியாணி நிறைய இருக்கிறது; வீணாகி விடும். சாப்பிட்டு போ” என்றார். பிச்சைக்காரனோ, ”நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேன்.” என்றான். ”அப்போ அடுத்த வேளைக்கு எடுத்துட்டு போ.” என்றார் செல்வந்தர். ”அதற்கு இப்பவே ஏன் நான் கவலைப்படணும்.” என்றான். செல்வந்தருக்கு ’சுளீர்’ என உரைத்தது. இந்த ஏழைக்கு இருக்கும் புத்தி எனக்கு இல்லாமல் போனதே என மனதிற்குள் வருந்தினார். பணியாட்களை அழைத்து, ”இன்று முதல் வீட்டில் தினமும் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். ஏழைகளுக்கு அழைப்பு விடுங்கள்.” என கட்டளையிட்டார். வெளியூர் சென்ற செல்வந்தரின் மனைவி வீடு திரும்பினாள். ஊர் மக்கள் சாப்பிடுவதைக் கண்டு திடுக்கிட்டாள். ”உங்களுக்கு என்ன பைத்தியமா! அன்னதானம் என்ற பெயரில் பணத்தை வீணாக்குகிறீர்களே!” என கோபித்தாள். ”வாழ்வில் மனிதனுக்கு எது நிரந்தரம்? எதுவரை நாம் உயிரோடு இருக்கப் போகிறோம்? தெரியாது. பணத்தை பெட்டியில் பூட்டி வைப்பதால் யாருக்கு லாபம்? மற்றவருக்கு கொடுத்து வாழ்வது தான் உண்மையான மகிழ்ச்சி. அன்னதானம் வழங்கினால் நாலுபேர் பசியாறுவார்கள்.” என்றார். உண்மையை உணர்ந்த மனைவியும், சாப்பிடுவோருக்கு பரிமாறத் தொடங்கினாள்.