பதிவு செய்த நாள்
20
ஜூன்
2019
12:06
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி வழியில் அமைந்துள்ள விஸ்வரூப ஜயமங்கள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வருகிற 23ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இக்கோயில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் விநாயகரும், இடதுபக்கத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன்,பரதன் ஆகியோரும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். 8 மீட்டர் அகலமும், 40 மீட்டர் ஆழமும் கொண்ட பிரமாண்ட தீர்த்த கிணறு உள்ளது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.
ராமர் பாதுகை : ராம பாத தரிசனம் என்பது விசேஷமானது. இதற்காக, சுமார் 100 ஆண்டு பழமையான சந்தன மரத்தால் செய்யப்பட்ட ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன.இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் போடப்பட்டுள்ளது.
ராமாயண கால மிதக்கும் கல் : சீதையை மீட்பதற்காக ராமர், இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற இரு வானரங்கள் இந்த பாலப்பணியை நடத்தின. இதில் நளன் என்பவன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. ராமருக்கு உதவி செய்ய, பாலம் கட்ட பயன்படுத்திய கற்களை மிதக்க செய்து, அசையாமல் பாதுகாத்தான் கடலரசன் சமுத்திரராஜன். இவன் மகாலட்சுமியின் தந்தை ஆவான். எனவே சீதையை மீட்க இந்த உதவியை செய்தான் என கூறப்படுகிறது.இப்படி ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்து தரிசனத்திற்கு வைத்துள்ளார்கள்.