சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று சந்திரகிரகணத்தை ஒட்டி காலையில் நடை தாமதமாக திறக்கப்படுகிறது. நேற்று மாலை 5:30 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து கணபதி நாகராஜா சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது.
18ம் படி வழியாக சென்ற மேல்சாந்தி ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பின் பக்தர்கள் படிவழியாக ஏறி தரிசனம் நடத்தினர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று சந்திரகிரகணம் என்பதால் காலை 5:30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து நெய்யபிேஷகமும் வழக்கமான பூஜைகளும் நடக்கிறது. அனைத்து நாட்களிலும் பகல் 12:30 மணிக்கு உச்சபூஜைக்கு முன் களபாபிேஷகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் படிபூஜை நடக்கிறது. இந்நாட்களில் சகஸ்ரகலச பூஜைகளும் நடக்கிறது. 21ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கேரளாவில் பெய்த பெருமழையில் பம்பை உருக்குலைந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தனியார் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில் கார் போன்ற சிறிய வாகனங்களில் வரும் பக்தர்கள் இனி பம்பை வரை செல்ல அனுமதித்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் படி பக்தர்கள் பம்பை வந்து இறங்கிய பின்னர் கார்களை நிலக்கல் அனுப்பி விட வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் கேரள அரசு பஸ்களில் நிலக்கல் சென்று ஊர் திரும்ப வேண்டும். சபரிமலையில் விட்டு விட்டு சாரல்மழை பெய்து வருவதால் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது.