பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
11:07
திருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நேர்த்திக்கடன்: திருத்தணி, முருகன் கோவிலில், இந்தாண்டு ஆடிக்கிருத்திகை விழா மற்றும் தெப்பத் திருவிழா துவங்குவதற்கு, இரு நாட்களே உள்ள நிலையில், நேற்று, மலைக்கோவிலில் அதிகாலை முதல், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சில பக்தர்கள் காவடிகளுடன் வந்து மொட்டை அடித்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.நேற்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் ஆடி மாதம் பிறந்து நான்கு நாட்கள் ஆன நிலையில், அதிகளவில், ஆந்திர மாநில பக்தர்கள் காவடிகளுடன் வந்து, முருகப் பெருமானை தரிசித்தனர். பொது வழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
சிரமம்: திருத்தணி, இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அதிகளவில், வாகனங்கள் மலைப்பாதையில் சென்றதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால், நடந்து செல்லும் பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர்.ஆடி மாதத்தையொட்டி, மூலவருக்கு, அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக்கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, தீபாராதனை நடந்தது.