பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
04:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின், அம்மன் சன்னதி தங்கக்கொடிமரம் முன்பு, அலங்கார ரூபத்தில், விநாயகர், பராசக்தி அம்மன், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, ஆடிப்பூர பிரமோற்சவ கொடியேற்றம் நடந்தது. விழாவில் வரும், 2ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன், அலங்கார ரூபத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழா நிறைவாக, வரும் 3ம் தேதி காலை, கோவில் வளாகத்தில் உள்ள, சிவகங்கை தீர்த்தத்தில், பராசக்தி அம்மன் தீர்த்தவாரியும், பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடக்கும். அன்று மாலை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், அன்றிரவு, காமதேனு வாகனத்தில் வீதி உலாவும், நள்ளிரவு, 12:00 மணிக்கு, அம்மன் சன்னதி எதிரில் தீமிதி விழாவும் நடக்கும்.