பதிவு செய்த நாள்
24
ஆக
2019
12:08
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆவணி கிருத்திகை விழா, நேற்று, கோலாகலமாக நடைபெற்றது.காலை, 6:00 மணி முதல், இரவு, 9:30 மணி வரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுவழியில், மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.
பெரும்பாலான பக்தர்கள், காவடிகளுடன் வந்து, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக, கிருத்திகை விழாவை ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன், மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலால், முருகன் கோவிலுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்களின் பைகளை, போலீசார், பரிசோதனை செய்த பின்பே, தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.