வண்டிகருப்பணசுவாமி கோயில் குட்டி, முட்டி படையல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2019 12:08
வடமதுரை : அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயிலில் ஏழு கிராம மக்கள் ஒன்றிணைந்து மழை வேண்டி குட்டி, முட்டி படையல் விழா நடத்தினர்.
திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள அய்யலுார் அருகே தங்கம்மாபட்டியில் வண்டி கருப்பணசுவாமி கோயில் உள்ளது. தங்கம்மாபட்டி, பொட்டிநாயக்கன்பட்டி, முடக்குபட்டி, புதுார், வால்பட்டி, கருஞ்சின்னானுார், செம்பன்பழனியூர் கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது. இங்கு மழை வேண்டி ஏழு கிராம மக்கள் குட்டி, முட்டி படையல் விழா நடத்த முடிவு செய்தனர்.இதற்காக கிராமத்திற்கு ஒன்று என ஏழு ஆட்டுக் கிடாக்கள் பொட்டிநாயக்கன்பட்டிக்கு கொண்டு வரப்பட்டன.
அங்குள்ள கோயில் வீட்டில் இருந்து பூஜை கூடை, கிடாக்களுடன் கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டும் ஊர்வலமாக கோயில் வந்தனர். வளாகத்தில் பொங்கல் வைத்து, ஏழு கிடாக்களை (குட்டி) வெட்டினர். மண் பானையில் (முட்டி) இறைச்சியை மட்டும் சமைத்து சுவாமிக்கு படையல் செய்து மழை வேண்டி வழிபட்டனர். ஆண்கள் மட்டும் பங்கேற்ற இவ்விழாவில் சாதம் ஏதுமின்றி இறைச்சியை மட்டும் வறுவலாக சமைத்து சாப்பிட்டனர்.