பதிவு செய்த நாள்
04
செப்
2019
02:09
ஓசூர்: ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், விநாயகர் சதுர்த்தியின் போது நிறுவப் பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளை, ஏரியில் கரைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளதா என, சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. பிரமாண்ட செட் அமைத்து, அதில் விநாயகரை அமைத்து, இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தினமும் பூஜை செய்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தை பொறுத்தவரை வரும், 6 மற்றும், 7க்குள் விநாயகர் சிலைகளை கரைக்க, போலீசார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை பகுதியில் வைத்துள்ள விநாயகர் சிலைகளை, பட்டாளம்மன் ஏரியில் கரைக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதேபோல், ஓசூர் டவுன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளில், 120க்கும் மேற்பட்டவை கடைசி நாளான, 8ல் தான் கரைக்கப்படுகின்றன.
அதற்காக வெளிமாவட்ட போலீசார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தர்கா சந்திராம்பிகை ஏரியில், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.
அதனால் மூன்று இடங்களில் வாகனங்களை நிறுத்தி, சிலைகளை கரைக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் மற்றும் ஓசூர் தர்கா சந்திராம் பிகை ஏரிகளில், சிலைகளை கரைக்க எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை, சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட எஸ்.பி., பண்டிகங்காதர், டி.எஸ்.பி.,க்கள் மீனாட்சி, முரளி ஆகியோர் உடனிருந் தனர்.