பதிவு செய்த நாள்
09
செப்
2019
03:09
ஓசூர்: ஓசூரில் நேற்று (செப்., 8ல்), போலீசார் பாதுகாப்புடன், 120க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி, பாகலூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி உட்பட பல்வேறு பகுதிகளில், கடந்த, 2ல் விநாயகர் சதுர்த்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயர்கள் சிலைகள் வைக் கப்பட்டு, தினமும் பூஜைகள் நடந்தன. நேற்று (செப்., 8ல்) ஓசூரில் வைத்திருந்த, 120க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடந்தது.
பாதுகாப்பு பணிக்கு சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார் தலைமையில், கிருஷ்ணகிரி எஸ்.பி., பண்டி கங்காதர், நாமக்கல் எஸ்.பி., அருளரசு, ஆறு ஏ.டி.எஸ்.பி.,க்கள், 13 டி.எஸ்.பி.,க்கள், 34 இன்ஸ்பெக்டர்கள், 97 எஸ்.ஐ.,க்கள் உட்பட மொத்தம், 1,531 போலீசார் ஊட்டி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர். ஓசூரில், எம்.ஜி.,ரோடு, நேதாஜி ரோடு, ஏரித்தெரு, தேன்கனிக்கோட்டை சாலை, ராமநாயக்கன் ஏரிக்கரை சாலை, ராயக்கோட்டை சாலை வழியாக மேளதாளங்கள் முழங்க ஆடி, பாடி விநாயகர் சிலைகளுடன் இளைஞர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இதனால் நகரமே, விழாக்கோலம் பூண்டது. ஊர்வலம் சென்ற சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மசூதி, தேவாலயங்களில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இறுதியாக, ஓசூர் சந்திராம்பிகை, ராமநாயக்கன் ஏரியில் சிலைகள் கரைக்கப் பட்டன.