பதிவு செய்த நாள்
08
நவ
2019
12:11
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் பக்தர்கள் மண் பொம்மை வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ராசிபுரம், நித்யசுமங்கலி மாரியம்மன் கோவில் பண்டிகை நடந்து வருகிறது. இதையொட்டி அருகில் உள்ள சி.எஸ்.புரம், புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் மாரியம்மன் கோவில் விழா நடக்கிறது.
சி.எஸ்.புரம் பகுதி மக்கள் மாரியம்மன் கோவிலில் மண் பொம்மை வைத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தங்கள் வீட்டில் இருக்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், குழந்தைகள், பெரியவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கோவிலில் பொம்மை வைப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறினால், மண்ணால் செய்யப்பட்ட கால்நடைகள், மனிதர்கள் பொம்மைகளை வாங்கி, கோவில் விழாவில் சுவாமிக்கு முன் வைத்து நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். நேற்று முன்தினம், சி.எஸ்.புரம் பகுதி மக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த, காட்டூர் சாலையில் உள்ள பொம்மை கடைக்கு வந்தனர். 120ல் இருந்து, 500 ரூபாய் வரை பொம்மை விற்பனையானது. மழைக் காலம், தொழிலாளர் பிரச்னையால் பொம்மை செய்வது கடினமாக இருப்பதாக கடை உரிமையாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இருப்பினும் பக்தர்களுக்கு தேவையான பொம்மைகள் இருப்பதாக கூறினர்.