""ததி சங்க துஷாராபம் க்ஷீரோ தார்ணவ ஸம்பவம் நமாமி சசி நம் ஸோமம் ஸம போர் மகுட பூஷணம்”
இதன் பொருள், ""தயிர், சங்கு, பனித்துளிக்கு நிகராக வெண்ணிறம் கொண்ட சந்திரனே! சகல நன்மையும் தரும் சிவனின் செந்நிற சடையில் இருப்பவனே! உன்னைத் தலை வணங்குகிறேன்” என சந்திரனுக்கும், சிவனுக்கும் உள்ள தொடர்பை இது குறிப்பிடுகிறது.
சிவனுக்கு உகந்த கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்த சந்திரன், அவரது தலையை அலங்கரிக்கும் பாக்கியத்தை அடைந்தார். இதனால் சிவனுக்கு பிறைசூடி எனப் பெயர் வந்தது.
தாயாரைக் குறிக்கும் கிரகமாக சந்திரன் உள்ளது. தாயார் நலமுடன் வாழவும், அவரது உறவு பலப்படவும் இந்த விரதம் துணைசெய்யும். ஜாதகத்தில் சந்திர திசை, புத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதம் மேற்கொள்வர். சிவத்தலங்களில் உள்ள தீர்த்தங்களில் தம்பதியாக நீராடி சிவனை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். அக்னி பிழம்பான சிவபெருமானை குளிர்விப்பதற்காக கோயில்களில் சங்காபிஷேகம் செய்கின்றனர். அப்போது 108 அல்லது 1008 வலம்புரி சங்குகளால் அபிஷேகம் செய்வர். அதை தரிசிப்போருக்கு கேட்டது கிடைக்கும். மனோபலம் அதிகரிக்கும்.
திருமண வைபவத்தில் மணமக்கள் அருந்ததியை பார்க்கும் சடங்கு நடக்கும். கற்புக்கரசியான அருந்ததியை, மகரிஷியான வசிஷ்டர் மனைவியாக அடைந்தது சோமவார விரத மகிமையால் தான். இந்த விரதமிருப்போருக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி வில்வ இலையால் சிவனை வழிபட வேண்டும். அதன் பின் பகல் முழுவதும் உண்ணாமல் இருக்க வேண்டும்.