தமிழக கோவிலில் திருடு போன சிலைகள் ஆஸி.,யில் மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2019 11:11
சென்னை: தமிழகத்தில் இருந்து 24 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட 4.98 கோடி ரூபாய் மதிப்புள்ள துவார பாலகர்கள் கற்சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சிலைகளை ஆஸ்திரேலிய அரசு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அத்தாளநல்லுாரில் மூன்றீஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து மர்ம நபர்கள் 1995ல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழு சிலைகளை திருடினர். இச்சிலைகள் திருடு போனது பற்றி அம்மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல்இருந்துள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சிலை கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ் சந்திர கபூர் 70 என்பவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் ஒன்பது பேருடன் சேர்ந்து அத்தாளநல்லுாரில் ஏழு சிலைகளை திருடி ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி கேன்பரா நகரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு விற்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து திருடு போனவற்றில் 4.98 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு துவார பாலகர்கள் கற்சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சிலைகளை ஜனவரியில் ஆஸ்திரேலிய பிரதமர் நம் நாட்டு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளார்.
இது குறித்து பொன் மாணிக்கவேல் கூறியதாவது: மீட்கப்பட்டுள்ள இரு சிலைகளும் அத்தாளநல்லாரில் உள்ள கோவிலில் இருந்து தான் திருடப்பட்டது என்பதை கண்டறிவது மிகவும் சிரமாக இருந்தது. சிலைகள் திருட்டு பற்றி திருநெல்வேலி மாவட்ட போலீசார் வழக்குப் பதிந்து இருந்தால் எளிதாக அடையாளம் கண்டு சிலைகளை முன்பே மீட்டு இருக்கலாம். இந்த சிலை மீட்பு முயற்சியில் என்னுடன் கூடுதல் எஸ்.பி. மலைச்சாமி மிகவும் உறுதுணையாக இருந்தார். மீதமுள்ள சிலைகளையும் விரைவில் மீட்போம். இவ்வாறு அவர் கூறினார்.