பதிவு செய்த நாள்
13
டிச
2019
11:12
சபரிமலை: புதிய வடிவம் பெறும் சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டப்படவுள்ளது.
30.62 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத் திட்டத்தின் படி சபரிமலை சன்னிதானத்தை சுற்றி கட்டடங்கள் இருக்க கூடாது. தற்போது சன்னிதானத்தின் வலது புறம் நிர்வாக அதிகாரி அலுவலகம், தந்திரி, மேல்சாந்தி அறைகள், அரவணை பிளான்ட் என ஏராளமான கட்டடங்கள் உள்ளது. தேவபிரஸ்னத்தில் இந்த கட்டடங்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. மாஸ்டர் பிளானும் அதன் படியே தயாரிக்கப்பட்டது.
கோயிலை ஒட்டி அமைந்துள்ள அப்பம், அரவணை பிளான்ட், கோயிலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேவசம் மெஸ் அருகே இங்கு ஆறு கோடி ரூபாய் செலவில் மூன்று மாடி கட்டடம் கட்டப்படும். இங்கு பிரசாத விற்பனையும் நடைபெறும். கோயிலின் மேற்கு வாசலில் பஸ்மகுளத்துக்கு செல்லும் வழியில் தனலெட்சுமி வங்கிக்கு அருகே தந்திரி, மேல்சாந்தி மடம் கட்டப்படும். தற்போது பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் நிர்வாக அலுவலகம் இடிக்கப்படும்.
தரிசனம் முடித்த பக்தர்களால் கோயிலின் கிழக்குப்பகுதியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க ரூ.19.75 கோடியில் மாளிகைப்புறம் கோயில் பின்புறம் போலீஸ் விடுதி அருகில் இருந்து சந்திராங்கதன் ரோடு வரை 375 மீ. நீளம், 8 அடி அகலம், 23.6 மீ., உயரத்தில் புதிய ஸ்டீல் மேம் பாலம் அமைக்கப்படும். ஒன்றரை ஆண்டுகளில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாளிகைப்புறம் கோயில் அருகே புதிய பிரசாத கவுன்டர் கட்டப்படும். இந்த பணிகள் நிறைவடையும் போது சபரிமலையின் வடிவமே மாறிவிடும்.