பதிவு செய்த நாள்
01
ஜன
2020
02:01
பென்னாகரம்: பென்னாகரம் அருகே உள்ள, பி.அக்ரஹாரம் முனியப்ப சுவாமி கோவில் திருவிழா நேற்று (டிசம்., 31ல்), நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பக்தர்கள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரஹாரத்தில், முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு, தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் மார்கழி மாதம், இரண்டாவது செவ்வாய்க்கிழமையில் இக்கோவில் திருவிழா நடக்கிறது.
இதையடுத்து, கோவிலை சுற்றியுள்ள சிக்கனம்பட்டி, புதூர், அரிச்சந்திரனூர், அக்ரஹாரம், கெட்டூர், நல்லாம்பட்டி உள்பட பல கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முனியப்ப சுவாமிக்கு விரதமிருந்து வந்து வழிபட்டனர். பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டனர். திருவிழாவில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கூட்டநெரிசலில் அசம்பாவிதங்களை தவிர்க்க, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை, இந்து அறநிலைத்துறை நிர்வாக அதிகாரிகள் ஊர்மக்கள் செய்திருந்தனர்.