பதிவு செய்த நாள்
29
ஏப்
2020
09:04
திருமணத்தடை நீங்க அம்மனுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடும் வாஸ்துநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் உள்ளது.
தல வரலாறு: ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு "அக்னீஸ்வர சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்குபுறமும் அகழி சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால், முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர். ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடல் பெற்றது. 6 அல்லது 7ம் நூற்றாண்டு கோயிலாக இது இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வடபாகமாக சாய்ந்த மூலவர்: பாணாசூரனின் தாயார், ஒரு வேண்டுதலுக்காக தினமும் ஒரு சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்தாள். 108வது லிங்கத்திற்கு பூஜை செய்தபோது, தன்னைப் போல் இவ்வாறு லிங்க பூஜை செய்தவர் யாருமில்லை என்ற ஆணவம் பிறந்தது. இதனால் இறைவன் அவளது வேண்டுதலை நிறைவேற்றவில்லை. இதை உணர்ந்த அந்தப் பெண்மணி, தன் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்க, காசி சென்று மண்ணால் லிங்கம் அமைத்து, பாவநிவர்த்தி செய்து கொள்ளும்படி கூறினார். பாணாசுரன் சிவபெருமானிடம், ""ஐயனே! என் தாய் வயதானவள். காசியில் செய்ய வேண்டியதை இங்கேயே செய்ய அருள வேண்டும், என்றான்.
இறைவனும் அவ்வாறே அருளினார். அப்போது அவர்கள் அமைத்த மணல் லிங்கம் ஒரு பக்கம் சாய்ந்தது. அந்த நிலையிலேயே அவர்கள் சிவனை வணங்கினர். வடபக்கமாக கோணலாக காட்சியளித்ததால், சிவனுக்கு "கோணபிரான் என்ற பெயர் ஏற்பட்டது.
கோயில் சிறப்பு: அக்னி பகவான் இங்கு சிலை வடிவில் காட்சி தருகிறார். நாவுக்கரசர் முக்தி பெற்ற தலம் இது. முருக நாயனார் இந்த ஊரில் அவதரித்து இந்தக் கோயிலில் சிவத்தொண்டு செய்தார். அவர் இவ்வூர் இறைவனை வர்த்தமானிஸ்வரர் என்று அழைத்தார். "வர்த்தம் என்றால் நிகழ்காலம். இவரை வழிபட்டால் நிகழ்காலத்தில் ஏற்படும் துன்பம் நீங்கி, வாழ்க்கை ஒளிமயமாகும் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. பிரகாரத்திலுள்ள பூதேஸ்வரரை வணங்கினால் பித்ரு தோஷத்துடன் கடந்த கால பாவங்களால் ஏற்பட்ட துன்பங்கள் விலகும். இங்குள்ள பவுட்சேஸ்வரரை வழிபட்டால் எதிர்காலம் நன்றாக அமையும். ஆக, முக்காலத்துக்கும் நன்மை தரும் மூன்று சிவலிங்கங்களை இங்கு மட்டுமே தரிசிக்கலாம் என்பது சிறப்பு.
விஷேசமான சனி பகவான்: இங்குள்ள சனி பகவான் கையில் காகத்துடன் காட்சி தருகிறார். நளமகராஜாவுக்கு ஏழரைச்சனி பிடித்து, அதை நிவர்த்தி செய்வதற்காக திருநள்ளாறு செல்லும் வழியில் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபட்டார். அவரது பாதம் இந்தக் கோயில் வாசலில் பட்டவுடனேயே தோஷம் நிவர்த்தியடைந்ததாம். இதனால் இங்குள்ள சனீஸ்வரரை, அனுக்கிரக சனீஸ்வரர் என்கின்றனர். திருநள்ளாறு செல்பவர்கள், முன்னதாக இங்கு சென்றால் தோஷம் நிச்சயம் நிவர்த்தியாகும் என்கிறார்கள். நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே வரிசையில் அருள்பாலிக்கின்றனர். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளது. காலசம்ஹார மூர்த்தி இங்கு தனியாக மூலஸ்தானம் கொண்டு எழுந்தருளியுள்ளார்.
இருப்பிடம்: நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் ரோட்டில் 22 கி.மீ.,தூரத்தில் திருப்புகலூர் உள்ளது. பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ.,தூரத்திலும், காரைக்காலில் இருந்து 20 கி.மீ.,தூரத்திலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ.,தூரத்திலும் கோயில் உள்ளது. அடிக்கடி பஸ் உண்டு.
திறக்கும் நேரம்: காலை 5-30- பகல் 12.30 மணி. மாலை 4 - இரவு 9 மணி.