பதிவு செய்த நாள்
03
ஆக
2020
07:08
இன்று ஆவணி அவிட்டம், ஆணி அவிட்டமான இந்நாளை, கல்வித்திருநாள் என்கிறார், காஞ்சி மகாபெரியவர். படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு வேதம் கிடைத்த நன்னாள் ஆவணி அவிட்டம். இதனால் இதை, வேதத்தின் ஆண்டு விழா என்று சொல்லலாம். பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் வேதம் ஓதும் அந்தணர்கள் நடத்தும் வழிபாட்டிற்கு, உபாகர்மா என்று பெயர். வேதம் கற்கத் தொடங்கும் நாள் என்பதால், உபாகர்மா எனப்பட்டது. இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடி புதிதாகப் பூணுால் அணிந்து, வேதத்தை படிக்கத் தொடங்குவர். தற்காலத்தில் கோவிலில் ஒன்று கூடி இந்த சடங்கை நடத்துகின்றனர். இன்று, வேத கால ரிஷிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தர்ப்பணம் செய்வர். ரிக்வேதிகள் ஆவணி திருவோண நட்சத்திரத்திலும், யஜுர் வேதிகள், ஆவணி பவுர்ணமியன்று உபாகர்மம் செய்வர். அதாவது ரிக்வேதிகள் நட்சத்திரத்தை வைத்தும், யஜுர் வேதிகள் திதியை வைத்தும் நாள் நிர்ணயிக்கின்றனர்.
பெரும்பாலும் இரண்டும் ஒரே நாளாகவே அமையும். சாமவேதிகள் இன்னும் சில நாள் கழித்து, பாத்ரபத மாத, அஸ்த நட்சத்திரத்தில் உபாகர்மாவைச் செய்வர். அநேகமாக விநாயகர் சதுர்த்தியன்றோ அல்லது அதற்கு ஒருநாள் முன்போ, பின்போ வரும். ஆவணி அவிட்டத்தை, பெரும்பாலும் புதுப் பூணுால் அணியும் நாளாக கருதுகின்றனர். உண்மையில் பூணுால் மாற்றுவது என்பது, உபாகர்மாவின் ஓர் அங்கம் மட்டுமே. பூணுால் அணிந்த பின், நாள்தோறும் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். மனதிற்குள் காம சிந்தனை நுழைவதற்குள், காயத்ரி தேவி நுழைந்து விட வேண்டும் என்பது இதன் நோக்கம். இதை ஜபிப்பதால் மனமும், உடலும் பரிசுத்தம் பெறும். அதன் மந்திர தன்மையால் உண்டாகும் ஆன்மிக அதிர்வலை, உலகிற்கு அளப்பரிய நன்மை அளிக்கும். வேதம் நமக்கு கொடுத்த பெருஞ்செல்வமான காயத்ரி ஜபத்தை, சந்ததிகளிடம் சேர்க்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.