பதிவு செய்த நாள்
17
அக்
2020
02:10
திருவான்மியூர் : திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவில் சுவர் ஏறி குதித்து, உள்ளை புகுந்த நபர், சுவாமியிடம் மனம் உருக வேண்டி, காணிக்கை செலுத்திய பின், உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்ற சுவாரசிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோவில். நேற்று காலை, வழக்கம் போல் ஊழியர்கள் கோவிலை திறந்தனர்.அப்போது, உட்புறத்தில் உள்ள இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
உதவி கமிஷனர் ரவி, ஆய்வாளர் ராமசுந்தரம் உள்ளிட்ட போலீசார் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். பின், கோவில் முழுவதும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.அதில், கொள்ளையடிக்க வந்தவர் செய்த செயலை பார்த்து, அனைவரும் வியப்படைத்தனர்.அந்த காட்சியில், நேற்று அதிகாலை, கோவில் மதில்சுவர் ஏறி குதித்து, ஒரு நபர் உள்ளே வருகிறார். சுவாமி சன்னதிகளுக்கு சென்று, மனம் உருக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார். பின், தன் தொழிலுக்கு சிக்கல் ஏற்படக்கூடாது என வேண்டி, உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்.அதன் பின், கோவில் உண்டியல்களை உடைத்து, தான் செலுத்திய காணிக்கையுடன், பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை அள்ளிக் கொண்டு செல்கிறார். ஊரடங்கிற்கு பின், கடந்த மாதம் தான், இக்கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நடந்துள்ளது. இதனால், திருட்டு போன காணிக்கை, சில ஆயிரம் ரூபாய் தான் இருக்கும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து, பக்தியுடன் சுவாமியை வேண்டி, கொள்ளையடித்த கொள்ளையனை தேடி வருகின்றனர்.