பதிவு செய்த நாள்
26
அக்
2020
06:10
சென்னை: கோவில் நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுக்க, சர்வே எண்கள் அடிப்படையில், பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை, பதிவுத்துறை துவக்கியுள்ளது.
தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், தனி நபர்களால் அபகரிக்கப்படுகின்றன. போலி ஆவணங்கள் தயாரித்து, வேறு பெயருக்கு பத்திரங்கள் பதிந்து, மோசடி நடக்கிறது. அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதில், அறநிலைய துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கு, பிற துறைகளின் ஒத்துழைப்பு, குறைவாக இருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அறநிலைய துறையின் நில மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க, பதிவுத்துறை முன்வந்துள்ளது. இதற்காக, பத்திரப்பதிவில் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில், திம்மையன்பேட்டை, காசி விஸ்வநாதன் மற்றும் வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 50 ஏக்கர் நிலம், சமீபத்தில் மீட்கப்பட்டது. தனியார் பெயரில் இருந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த நிலம் தொடர்பான விற்பனையில் ஏமாற வேண்டாம் என, அறநிலைய துறைஅறிவித்தது. இதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில், இதில் சம்பந்தப்பட்ட, சர்வே எண்களில், போலி ஆவணங்கள் ரத்து விபரத்தை, வில்லங்க சான்றில் சேர்க்க, மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதன் வாயிலாக, இதில் தொடர்புடைய நிலங்கள் விற்பனை பதிவு தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பிற மாவட்டங்களிலும் பதிவுத்துறை ஒத்துழைத்தால், கோவில் நில மீட்பு பணிகள் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.