ஒருவர் சொல்லும் விஷயத்தை இன்னொருவர் ஆமோதித்தால், இவரு சரியான ஆமாம் சாமி என்று வேடிக்கையாக சொல்வோம் இல்லையா? முதன்முதலில் ஆமாம் போட்டதே ஒரு சாமி தான்! அவர் தான் குருவாயூரப்பன். அவர் ஆமாம் சாமி போட்ட கதையைக் கேளுங்க! 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த, கிருஷ்ண பக்தரான நாராயண பட்டத்திரி எழுதிய நூல் நாராயணீயம். 1000 ஸ்லோகங்களைக் கொண்ட இந்நூல், நாராயணனின் பெருமையைக் கூறுகிறது. பாகவதத்தில் இடம்பெற்றுள்ள கிருஷ்ண வரலாறு முழுவதும் இதில் உள்ளது. ஒவ்வொரு கதையையும் எழுதும்போதும் குருவாயூரப்பனிடம், உன் வாழ்வில் இப்படியெல்லாம் நடந்தது உண்மையா? என்று பட்டத்திரி கேட்க, குருவாயூரப்பனும் ஆமாம் என்ற தலையசைத்தார். இதனால் இவர் ஆமாம் சாமி ஆனார். பக்தி என்னும் பாலும், ஞானம் என்னும் கற்கண்டும் கலந்த நாராயணீயத்தைப் பாராயணம் செய்தால் உடல் நோயும், உள்ளத்தளர்வும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.