முன்னோர்களின் தர்மத்தின் அடையாளமாக நிற்கும் ஆறுகால் மண்டபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2020 04:12
காரியாபட்டி: அழகர் கோயில் செல்லும் பக்தர்களுக்கு அன்னம் வழங்க கட்டப்பட்ட ஆறுகால் மண்டபம் ஆறு தலைமுறையாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.
காரியாபட்டி எஸ்.தோப்பூர் அருகே உள்ள ஆறுகால் மண்டபம் முன்னோர்கள் செய்த தர்மத்தின் அடையாளமாக இன்றளவும் கம்பீரமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டி பூட்டியும், பாதயாத்திரையாகவும் அழகர் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இரண்டு, மூன்று நாட்கள் என நடந்து செல்லும்போது உணவுக்காக சிரமப்படுவார்கள் என்பதை அறிந்து, இதனை போக்க வேண்டும், பசியோடு வருவோருக்கு உணவளிக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு, எஸ். தோப்பூரை ஊரைச் சேர்ந்த கார்மேகம் குடும்பத்தை சேர்ந்த 6 தலைமுறைக்கு முன்பே அன்னசத்திரம் ஏற்படுத்தினர். முற்றிலும் கற்களால் உருவாக்கப்பட்டது. ஆறு தூண்களை கொண்டதால் இதற்கு ஆறுகால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. பாதயாத்திரையாக வருபவர்கள் இரவில் தங்கி ஓய்வு எடுத்து சென்றுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, சிரமமின்றி அழகர்கோவில் சென்றுவர அன்னதானம் வழங்கி, அன்புடன் வழிநடத்தி அரவணைப்புடன் நடந்துகொண்ட முன்னோர்களின் தர்மம் இன்றளவும் பேசப்படுகிறது. அதற்கான எடுத்துக்காட்டாய் ஆறுகால் மண்டபம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
கார்மேகம், எஸ். தோப்பூர். 200 ஆண்டுகளுக்கு முன் எனது முன்னோர்கள்அழகர் கோயில் செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்து, பசியாற வேண்டும் என்கிற நோக்கத்தில் கற்களால் ஆன ஆறு கால் மண்டபத்தை ஏற்படுத்தினர். எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கினர். தற்போது வாகன போக்கு வரத்து அதிகரித்ததால் மாட்டுவண்டி, பாதயாத்திரை என்பது அரிதாகிவிட்டது. யாரும் பாதயாத்திரை செல்லாததால் சில ஆண்டுகளாக அன்னதானம் வழங்கவில்லை. சித்திரை திருவிழாவின்போது பொங்கல் வைத்து பூஜை செய்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வோம். இன்றளவும் தர்மத்தின் சின்னமாக கம்பீரமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார்.