பதிவு செய்த நாள்
05
மே
2021
06:05
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாழடைந்து கிடக்கும் பல நூறாண்டு சிவன் கோயிலை மீட்டெடுத்து புனரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவயல் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய நெடுவயல் கிராமத்தில் பல நூறாண்டு பழமையான சிவன் கோயில் உள்ளது. இங்கு மூலஸ்தான லிங்கமாக நிகரில்லா மணீஸ்வரரும், சிவகாமவல்லியாக அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். விநாயகர், சுப்பிரமணியர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் இடிந்து உருக்குலைந்து போய் உள்ளது. அங்கிருந்த சிலைகள் கோயிலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. வெளியே இருந்த நவக்கிரக சன்னதியை காணவில்லை. முழுவதும் கல்தூண், பலகை கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ளது. கோயிலுக்கு முன்புறம் இருந்த கல்மண்டபம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையில் இடிந்து விழுந்துவிட்டது. இக்கோயிலை ஒட்டியுள்ள கண்மாய் ஒரு காலத்தில் தெப்பக்குளமாக இருந்துள்ளது. இக்கண்மாயில் பழமையான சாமி சிலைகளும் கோயில் கட்டுமானக் கற்களும் புதைந்து கிடக்கிறது. இக்கோவிலை புனரமைத்து முழுமையான வழிபாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை வைத்த நிலையில் அரசும், அறநிலையத்துறை அதிகாரிகளும் வருமானம் இல்லாத இக்கோயிலை எட்டி கூட பார்க்கவில்லை. தமிழர்களின் ஆன்மீக, கலை, பண்பாட்டு அடையாளத்திற்கு இலக்கணமாய் திகழும் இக்கோயில் அந்நியர் படையெடுப்பின் போது சேதப்படுத்த பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போதைக்கு இக்கோயிலில் வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் ஒரு கால பூஜை மட்டும் நடத்தப்படுகிறது. பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் அவ்வப்போது இக்கோயிலுக்கு முடிந்தளவு உழவாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே அரசு கண்டுகொள்ளாத நிலையில் தமிழர்களின் ஆன்மீக வரலாற்று விழுமியங்களை உள்வாங்கி உறங்கிக் கொண்டிருக்கும் இக்கோயிலை மீட்டெடுத்து புனரமைக்க பக்தர்களும் இந்து அமைப்புகளும் முன்வர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கே.நெடுவயல் கிராமத்தின் முன்னாள் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் கூறியதாவது, நெடுவயல் ஜமீன் கட்டுப்பாட்டில் சிறிய, பெரிய 56 கோயில்கள் இருந்தன. ஜமீன் ஒழிப்புக்கு பிறகு பல கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஒரு சில கோயில்கள் மட்டும் அந்தந்தப் பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிவன் கோயில் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்துள்ளது. தற்போது சிதிலமடைந்துள்ளது. பக்தர்கள், பொதுமக்களின் பங்களிப்புடன் சிறிய அளவில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலை புனரமைத்து முழுவழிபாட்டுக்கு கொண்டுவந்தால் பக்தர்கள் சந்தோஷப்படுவார்கள், என்றார்.
ஜெ.ரவிச்சந்திரன் சிவாச்சாரியார் கூறியதாவது, 1943 ல் இக்கோயிலில் பூஜை வைத்து வழிபாட்டு முறைகளை தொடர்ந்து செய்ய எங்கள் முன்னோருக்கு இப்பகுதி ஜமீன் உத்தரவு கொடுத்திருக்கிறது. அன்று முதல் தொடர்ந்து பூஜை செய்து வருகிறோம். 2003 ல் நான் பூஜைக்கு வந்த பிறகு பாழடைந்து கிடந்த கோயிலை சுத்தப்படுத்தி வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மட்டும் பூஜை செய்கிறோம். பக்தர்கள் இக்கோயிலுக்கு சில வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கோயிலுக்குள் பெரிய நாகப்பாம்பு ஒன்று சிவலிங்கத்துக்கு அருகில் வசித்து வருகிறது. பல பக்தர்கள் இதை பார்த்துள்ளனர். அரசும் பக்தர்களும் இக்கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டு முழு அளவில் வழிபாடு நடக்க உதவ வேண்டும், என்றார்.