சபரிமலையில் 14ம் தேதி மகர சங்கராந்தி பூஜை: ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2022 08:01
சபரிமலை: சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அன்று மதியம் 2.29 மணிக்கு மகர சங்கராந்தி பூஜை நடைபெறும்.
கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கிய மகர ஜோதி சீசனில் அதிகமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் 8 நாட்களில் 14.65 லட்சம் பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். 25.28 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் தேவசம்போர்டும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் இணைந்து மகரஜோதி தரிசனத்திற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். பாண்டி தாவளம், மாளிகைப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் அமர்ந்து ஜோதி தரிசனம் நடத்துவதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. பாண்டி தளத்தில் மட்டும் 8000 பேர் தரிசனம் நடத்த முடியும். மகரஜோதி நாளில் மட்டும் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சன்னிதானத்தில் இருப்பார்கள் என்ற கணக்கின் அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் சபரிமலையில் மகர சங்கராந்தி பூஜை நடைபெறுகிறது. இந்த ஆண்டு 14-ம் தேதி மதியம் 2.29 மணிக்கு இந்த பூஜை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொடுத்து விடப்படும் நெய்த் தேங்காய்கள் உடைக்கப்பட்டு நேரடியாக ஐயப்பனின் விக்கிரகத்தில் அபிஷேகம் செய்யப்படும்.