சபரிமலை: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண பவனிக்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கியது. சபரிமலையில் மகரவிளக்கு கால பூஜைகள் தற்போது நடைபெற்று வருகிறது. தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 60 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் ஸ்பாட் புக்கிங் மூலமும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் தரிசனத்துக்கு எல்லா நேரமும் கியூ காணப்படுகிறது. பெருவழிப்பாதையில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மண்டல, மகரவிளக்கு காலத்தில் தேவசம்போர்டின் மொத்த வருமானம் 100 கோடி ரூபாயை கடந்தது. மகரவிளக்கு காலத்தில் மட்டும் 17.75 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில் அரவணை விற்பனையில் 6.75, காணிக்கையாக 8.25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அப்பம் விற்பனையில் 75.50 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. மண்டல காலத்தில் வருமானம் 84.93 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. நாணயங்கள் இன்னும் எண்ண வேண்டியுள்ளதால் வருமானம் மேலும் அதிகரிக்கும், கூட்டத்தை சமாளிக்க மூன்று அரவணை கவுண்டர்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு கவுண்டர் மட்டுமே திறக்கப்பட்டது. இதனால் மாளிகைப்புறம் கோயில் அருகே இரண்டு கவுண்டர்கள் திறப்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பம்பையில் கேரள அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஸ்பெஷல் சர்வீஸ் மூலம் 15 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மகரஜோதிக்கு முன்னோடியாக 11–ம் தேதி நடைபெறும் எருமேலி பேட்டைதுள்ளலுக்கு அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். இந்த குழுவினர் இவர்களின் பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். 12–ம் தேதி புறப்படும் திருவாபரண பவனிக்காக காட்டு பாதைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. பவனியில் கலந்து கொள்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. பந்தளம் அரண்மனையில் திருவாபரணங்களை தரிசிக்க அதிக கூட்டம் காணப்படுகிறது.