வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.
இக்கோயிலில் சித்திரை வருடப்பிறப்பு, பிரதோஷம், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று ஏப்ரல் 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என நேற்று முன்தினம் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் முதல் சதுரகிரி கோயில் வனப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை ஏற்பட்டு ஓடைகளில் நீர்வரத்து காணப்படுகிறது. மேலும், எதிர்வரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்ற நிலை இருப்பதால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் வருட பிறப்பு, தொடர் விடுமுறையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்த சதுரகிரி பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.