ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தொடர் (3நாட்கள்) விடுமுறையை யொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் . அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் .கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூறு தாரக. சீனிவாசலு மேற்பார்வையில் பக்தர்கள் வரிசைகளில் தள்ளுமுள்ளு ஏற்படாமல் ஏற்பாடு செய்திருந்தனர். இன்று வார இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுபட்டனர். இதேபோல் கோயிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகளான சுப்ரபாரத சேவை, ருத்ர ஹோமம்,சென்டி ஹோமம், அர்ச்சனை, கல்யாண உற்சவம், கோ பூஜை, தீபாராதனை மற்றும் 4 கால ருத்ர அபிஷேகங்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் வெள்ளம் புடைசூழ்ந்தது. இதேபோல் சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டபம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோயில் அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தனர். குறிப்பாக விரைவு தரிசனம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டதாக கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு தெரியப்படுத்தினார்.