சிங்கம்புணரி: சிங்கம்புணரி ராயன் கருப்பன் கோவில் மாசிக்களரி திருவிழா நடந்தது. ஆண்டுதோறும் மாசி மகத்தையொட்டி நடத்தப்படும் இத்திருவிழா இந்தாண்டு மார்ச் 3, 4 தேதிகளில் நடந்தது. முன்னதாக கோயில் நிர்வாகத்தினர் பிப். 25ம் தேதி பாதயாத்திரையாக பிரான்மலை உச்சிக்கு சென்று தீர்த்தமாடி வந்தனர். இதைத் தொடர்ந்து மார்ச் 3ம் தேதி முழுவீரன் தெரு கோயிலில் இருந்து வளரி, அரிவாள் உள்ளிட்ட சுவாமி ஆயுதங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புதுவயல் கோயிலில் சாத்தப்பட்டது. பயறு பாளை படையல் போடப்பட்டு சாமியாடிகள் வளரி வீசியும், அரிவாள் மீது ஏறியும், கரகம் எடுத்தும் அருள் வாக்கு கூறினர். நேற்று பொங்கல் வைத்து கிடா பலியிடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.