பதிவு செய்த நாள்
27
மார்
2023
13:36
தஞ்சாவூர்: கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாடல் பெற்ற ஸ்தலமாக, மங்களாம்பிகை அம்பாள் சமேத ஆதிகும்பேஸ்வர் கோவில் விளங்குகிறது.மகாமகத்திற்கு முதன்மையான கோவிலாகும். இக்கோவில், கடந்த 2009, ஜூன்.,5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் மூலம் 8 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் துவங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பணிகளை துவங்குவதற்கான பாலாலயம் செய்வதற்காக, கடந்த மார்ச். 24ம் தேதி காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து, 25ம் தேதி தன, கஜ, கோ, அஸ்வ பூஜைகளுடன் முதல் கால யாக சாலை பூஜைகளும், 26ம் தேதி இரண்டு, மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து இன்று காலை அதிகாலை 4 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர், காலை 6:10மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், திருப்பணிக்கான கொடிமரம் நடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.