பதிவு செய்த நாள்
17
ஜூன்
2023
04:06
சிதம்பரம்: பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் காலை 8.25 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நாளை 18-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 19-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 20-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 21-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 22-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 23-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 24-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. முக்கிய விழாவான தேர் மற்றும் தரிசன விழா 25 -ம் தேதி ஞாயிற்றுகிழமை, தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அடுத்த நாள் 26-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது, பின்னர் காலை 10 மணிக்கு சித்ரசபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்பு, பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூன் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது, உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் க.சி.சிவசங்கர தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.