41 நாட்கள் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2023 11:11
நாகர்கோவில்; சபரிமலையில் 41 நாட்கள் நீண்டு நடக்கும் மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. டிச.,27 ல் மண்டல பூஜை நடைபெறும்.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலையில் நடைபெறும் பூஜைகள் ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் இருமுடி கட்டு ஏந்தி வந்து ஐயப்பனை வணங்கி செல்கின்றனர். 41வது நாள் டிச.27 ல் ஐயப்பன் விக்ரகத்தில் திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். இந்த பூஜைக்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் 18 படிகள் வழியாக கீழே இறங்கி சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். பின்னர் 18-ம் படிக்கு கீழே இருமுடி கட்டுடன் நிற்கும் புதிய மேல் சாந்திகளான சபரிமலை - பி.என். மகேஷ், மாளிகைபுறம் - வி.ஜி.முரளி ஆகியோரை கைபிடித்து அழைத்து ஸ்ரீ கோயிலுக்கு முன் கொண்டு வருவார். இரவு 7:00 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சபரிமலை மேல் சாந்தி பி.என். மகேஷுக்கு அபிஷேகம் நடத்தி ஐயப்பன் மூல மந்திரம் காதில் சொல்லிகொடுத்து ஸ்ரீ கோயிலுக்குள் அழைத்து செல்வார். இதுபோல மாளிகைபுறம் மேல் சாந்திக்கும் அபிஷேகம் நடத்தி மூலஸ்தானத்திற்குள் அழைத்து செல்லப்படுவார்.இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை மறுநாள் 17ல் அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி பி.என்.மகேஷ் நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். எல்லா நாட்களிலும் காலை 3:15 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். காலையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, மதியம் கலசாபிஷேகம், களபாபிஷேகம் , உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை இரவு 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம்,9:00 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெற்று இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். டிசம்பர் 27ல் மண்டலபூஜை நடைபெறும் . இந்த நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். மண்டல காலத்தில் திரண்டு வரும் பக்தர்களை எதிர்கொள்ள சபரிமலை தயாராகியுள்ளது. சபரிமலை செல்லும் ரோடுகள் சீரமைக்கப்பட்டு தார் போடப்பட்டுள்ளது. பக்தர்கள் இடைத்தங்கும் இடமான நிலக்கலில் இந்த ஆண்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதைகளில் இரு ஓரங்களிலும் குடிநீர் வசதி, குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதானம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, இதய நோய் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டும் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்த வேண்டும். இங்கிருந்து கேரளஅரசு பஸ்ஸில் பம்பை சென்று திரும்ப வேண்டும். கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி நிலக்கல்- பம்பை பஸ்களில் இந்த ஆண்டு கண்டக்டர் நியமிக்கப்படுவார். இதற்கிடையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் புதிய தலைவராக பி. எஸ். பிரசாந்த், உறுப்பினராக அஜிகுமார் ஆகியோர் நேற்று திருவனந்தபுரத்தில் பொறுப்பேற்றனர்.
சபரிமலை பக்தர்களுக்காக செங்கனூர் ரயில் நிலையத்தில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சீசன் முடியும் வரை கூடுதல் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் -திருநெல்வேலி இடையே வந்தே பாரத் சபரிமலை ரயில் எல்லா வியாழக்கிழமையும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா வியாழக்கிழமையும் காலை 6:00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு பகல் 2 :15 மணிக்கு சென்றடையும். பகல் 3 :00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.