மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2024 10:04
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று (ஏப்.12) கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. முன்னதாக, மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதியில் வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்தனர். சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சரியாக இன்று காலை 10:05 மணிக்கு சி்த்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி சிம்மவாகனத்திலும் பவனி வருகின்றனர். சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்க மதுரை விழாக்கோலம் பூண்டு உள்ளது.
ஏப்.13 முதல் 18 வரை தினமும் காலை, மாலையில் மாசி வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.18 அன்று இரவு 7:35 க்கு மேல் 7:59 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். ஏப். 20 மாலை 6:30 இரவு 11:30 வரை திக்கு விஜயம் நடைபெறும். முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.21 காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் நடைபெறும். அன்று மாலை பூப்பல்லக்கில் மீனாட்சி - சொக்கநாதர் நான்கு மாசி வீதிகளிலும் வீதிஉலா வருவர். ஏப்.22 காலை 6:05 முதல் 6:45 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். ஏப். 23 மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவுபெறும். ஏப். 22 அன்று தல்லாகுளத்தில் கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்.,23 ல் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவும் நடைபெறுகிறது.