ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த நடைமேடை தூண்கள், தடுப்பு வேலி கம்பிகளை சமூக விரோதிகள் உடைத்து ரகளை செய்கின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுவது வழக்கம். அதன்படி நீராடி சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பொழுதுபோக்கிட அக்னி தீர்த்த கடற்கரை அருகே 300 மீ., தூரத்தில் நடைமேடை அமைத்து, அதனுள் ராமாயண வரலாற்று ஓவிய படங்களும் வைத்து உள்ளனர். இந்த மேடையில் பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் நடைபயிற்சி சென்று, கடல் அழகை கண்டு ரசிப்பார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் இந்த நடைமேடையில் குடிமகன்கள் அமர்ந்து மது குடித்து போதையில், இங்குள்ள தடுப்பு சுவர், கம்பிகள் மற்றும் கிரானைட் கல்லில் உள்ள நாற்காலிகளை உடைத்து ரகளை செய்கின்றனர். மேலும் சிலர் தடுப்பு கம்பிகளை உடைத்து திருடி செல்கின்றனர். இதனால் நடைமேடை அலங்கோலமாய் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மேலும் இவ்வழியாக ஓலைக்குடா கிராமத்திற்கு செல்லும் மக்கள் குடிமகன்கள் ரகளையால் பீதி அடைகின்றனர். எனவே அக்னி தீர்த்த நடைமேடையை புதுப்பித்து, ரகளை செய்யும் சமூக விரோதிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.